கோவை,
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள். அவர்கள் இங்கு வந்த பின்னர் கார்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து அவினாசி சாலையில் உள்ள சிக்னல் வரை காரில் வந்தார். பின்னர் அந்த பயணி திடீரென்று தனது 2 கால்களிலும் ஸ்கேட்டிங் செய்யும் கருவியை மாட்டினார். பிறகு திடீரென்று அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் பின்புற ஏணியை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்தார். பஸ்சை பிடித்தபடி ஸ்கேட்டிங் விமான நிலைய சிக்னலில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை ஸ்கேட்டிங் செய்தபடியே வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி சென்றார். வெளிநாட்டு நபர் அரசு பஸ் ஏணியை பிடித்து ஸ்கேட்டிங் செய்தபடி வந்ததை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தபடி வந்தனர். பின்னர் அந்த வீடியோவை முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அத்துடன் அவர் கோவையில் இருந்து எங்கு செல்கிறார் என்பதும் தெரியவில்லை. போலீசார் விசாரணை இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் அந்த வெளிநாட்டு நபர் யார்? எதற்காக அரசு பஸ் ஏணியை பிடித்தபடி ஸ்கேட்டிங் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் உள்ள சாலைகளில் பைக் கார்களில் செல்ல முடியாத நிலைமையில் ஸ்கேட்டிங் செய்தபடி வெளிநாட்டவர் ஒருவர் சென்ற சம்பவம் கோவை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.