
கோவை,
கோவையைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி என்பவரின் மகன் சஞ்சய் குமார் ரெட்டி (46). இவர் நடிகர் அருண் விஜயை வைத்து சினம் காக்க என்ற திரைப்படத்தையும் நரகன், சினம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒளியும் ஒலியும் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசஸ் என்ற மலையாள திரைப்படத்தை நீலேஷ் என்பவர் இயக்குனராகவும் காலேஷ் ராமானந்த் என்பவரை ஹீரோவாக வைத்து தயாரித்தார் .மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு மே மாதம் நிறைவு பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கேரள மாநிலம் கொச்சினில் உள்ள நிறுவனத்தில் கொடுத்திருந்தார். இந்நிலையில 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சஞ்சய் குமார் ரெட்டி தனது மனைவி லாவண்யாவுடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சஞ்சய் குமார் ரெட்டியின் திரைப்பட நிர்வாகம் மற்றும் அலுவலக மேனேஜராக பணிபுரிந்த தனது தம்பி ரமேஷிடம் பொறுப்புகளை ஒப்படைத்து சென்றார் .அப்போது நிரப்பப்படாத வங்கி செக்குகள், கையொப்பமிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள்கள் ஆகியவற்றை திரைப்பட சம்பந்தமான ஒப்பந்தங்களுக்கு பயன்படுத்துவதற்காக சஞ்சய் குமார் ரெட்டி கொடுத்து சென்றார் .மேலும் 100 கிராம் எடையுள்ள பதினெட்டு தங்க கட்டிகளை தனது தம்பி ரமேஷ் வங்கியின் லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். லண்டனுக்கு சென்ற சஞ்சய் குமார் ரெட்டி தனக்கு பணம் தேவைப்படுவதாக தம்பி ரமேஷிடம போன் மூலம் கூறியுள்ளார். மேலும் தங்க கட்டியை விற்று அந்த பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறார் .ஆனால் ரமேஷ் பணத்தை அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சஞ்சய் குமார் ரெட்டி தனது தம்பி ரமேஷ் நடவடிக்கைகள் குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் விசாரிக்க தொடங்கினார் .அப்போது ரமேஷ் வங்கி லாக்கரிலிருந்த 18 தங்க கட்டிகள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த ஜீப் , வேன்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் சஞ்சய் குமார் ரெட்டி கையொப்பமிட்டு கொடுத்திருந்த ஆவணங்களை வைத்து விற்பனை செய்துள்ளார். அதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சஞ்சய் குமார் ரெட்டியின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 கிராம் தங்க நகைகள் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் தம்பி ரமேஷ் குமார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சஞ்சய் குமார் ரெட்டி சார்பில் பொள்ளாச்சி கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் கோவை நகரில் போலீசில் புகார் அளித்த போது இதை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். தொடர்ந்து சஞ்சய் குமார் ரெட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் போஸ்ட் புரொடகஷன் பணிகளுக்காக கொச்சினில் கொடுக்கப்பட்டிருந்த சினிமாவின் ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து விசாரித்துள்ளார் .அப்போது சஞ்சய் குமார் ரெட்டி இறந்து விட்டதாகவும் பேசஸ் திரைப்படத்தை கோவை புதூரைச் சேர்ந்த அங்காளம்மன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு சென்சார் பணிகள் முடிந்துவிட்டதும் தெரிய வந்தது. ரமேஷ் ,திரைப்பட இயக்குனர் நீலேஷ், போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளை செய்த நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ், மற்றும் கோவை புதூரை சேர்ந்த முருகேசன் ஆகியோர் திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி இறந்துவிட்டதாக போலியான இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து இந்த பணிகளை செய்து இருப்பதும் பணிகள் முடிந்த திரைப்படத்தை 6 கோடி ரூபாய்க்கு வேறு ஒரு தயாரிப்பாளருக்கு விற்பனை செய்து 20 லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றிருப்பதும் தெரியவந்தது .மேலும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அடையாளம் தெரியாத பிணமாக வைக்கப்பட்டு இருந்த ஒருவரது சடலத்தை சஞ்சய் குமார் ரெட்டி என அடையாளப்படுத்தி சஞ்சய் குமார் ரெட்டி பெயரில் இறப்புச் சான்றிதழ் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவு , தமிழக போலீஸ் டிஜிபி கேரள மாநில போலீஸ் டிஜிபி, சிபிஐ ஆகியோருக்கு உடனடியாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலரி வட்டம் போலீசார் திரைப்பட தயாரிப்பாளரின் போலியான இறப்புச் சான்றிதழை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நீலேஷ், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனித்த சாலச்சித்திரம் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷ், கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்த முருகேசன், திருச்சி மாவட்டம் பொன் மலையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருடன் இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி இறந்து விட்டதாக அடையாளம் தெரியாத பிணத்தை வைத்து போலியான இறப்புச் சான்றிதழ் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.