
கோவை அடுத்த மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் சமத்துவ நகர் உள்ளது . இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந் நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை. இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை குடியிருப்பு சங்க தலைவர் அசன், துணைதலைவர் மிளகாய் நூர், செயலாளர் செல்வம், பொருளாளர்கள், ஹனீபா, சேட் ஆகியோர் தலைமையில் சமத்துவ நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள சுகுணாபுரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் மதுக்கரை போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து 20 நாட்கள் ஆகிறது. இன்னும் தண்ணீர் வரவி ல்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சாலை வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. எனவே எங்களுக்கு தண்ணீர் பிரச்சினையை தீர்த்து தர வேண்டும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என தெரிவித்தனர். அதுவரை மறியலை கைவிடமாட்டோம் என்றனர்.இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வர சொல்கிறோம். நீங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாருங்கள் என அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.