வீட்டில் திருட நோட்டமிட்டவர் கைது

வீட்டில் திருட நோட்டமிட்டவர் கைது

கோவை வடவள்ளி அடுத்து மருதமலை ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு இந்த பகுதிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். முதலில் யாரோ உறவினர் ஒருவரை பார்க்க வந்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் நினைத்தனர். ஆனால் வாலிபர் நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்து வந்தார். மேலும் சில வீடுகளை நோட்டமிட்டவாறே நடந்து சென்றுள்ளார். இதற்கிடையே குன்றக்குடி அடிகளார் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அந்த வாலிபர் புகுந்து விட்டார்.இதனை பார்த்த வீட்டில் இருந்த பெண், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும், மர்ம நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். பொதுமக்கள் சுதாரித்து கொண்டு மர்மநபரை பிடித்தனர். பின்னர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வாலிபர் போலீசாரை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் சுப்பிரமணியபுரம் ஜி.என்.மில் பகுதியை சேர்ந்த மனோகர்(42) என்பதும், ஏற்கனவே இவர் மீது சாய்ப்பா காலனி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பதும், தற்போது ஐ.ஓ.பி.காலனி குடியிருப்பு வீட்டில் திருடும் நோக்கத்தில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது ெசய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *