
கோவை,
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இவர் தொழிலை விரிவு செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அடமானமாக வைத்து 3 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேசவ பாண்டியனின் வங்கி காசோலையை அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவ பாண்டியன் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது மேலாளருக்கு இமெயில் மற்றும் தொலைபேசி மூலமாக புகார் அளித்தார் .ஆனால் புகார் அளித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து கேசவ பாண்டியன் தனது நண்பர்களிடம் விசாரித்த போது சிட்டி யூனியன் வங்கி நிர்வாகி இயக்குனருக்கு தெரிந்து இதுபோல பல நபர்களின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரமும் தெரியவந்தது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் தனது பணத்தை வங்கி அதிகாரிகளே கையாடல் செய்ததாக கேசவ பாண்டியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் காமகோடி, திருச்செங்கோடு சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் மோகன் ,கிளை மேலாளர் குஞ்சிதபாதம் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து வங்கி கடனில் இயந்திரங்களை வாங்கியதாக போலியான ஆவணங்களை சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் தயார் செய்தனர். பின்னர் அந்த இயந்திரங்களை வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல் திருடி சென்று விட்டதாக சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் கேசவ பாண்டியன் மீது பொய்யான புகார் ஒன்றை திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் கேசவ பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்தனர் .இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவ பாண்டியன் போலியான ஆவணங்களை குறிப்பாக கேசவ பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தாரின் கையெழுத்துகளை போலியான முறையில் போட்டு ஆவணங்களை தயாரித்து கடன் வாங்கியதாக மோசடி செய்த வங்கி அதிகாரிகள் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கொரோனா காலகட்டத்தில் கேசவ பாண்டியன் வாங்கிய கடனுக்கு பணத்தை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குறைந்த விலைக்கு ஏலம் விட்டு திருச்செங்கோட்டில் வங்கி செயல்பட்டு வரும் கட்டடத்தின் உரிமையாளருக்கு விற்று விட்டனர். இதனால் 25 கோடி ரூபாய் வரை கேசவ பாண்டியனுக்கு இழப்பு ஏற்படுத்தினர். கோவை மண்டலத்திற்குள் இந்த வங்கி வருவதால் வழக்கு கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கேசவ பாண்டியன் மீது வங்கி நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கேசவ பாண்டியன், அவரது தந்தை ,தாய், சகோதரர் உள்ளிட்டோரின் கையெழுத்துக்களை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் கேசவ பாண்டியன் கடந்த ஆண்டு புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் அரவிந்த், கும்பகோணத்தில் உள்ள வங்கியின் மேனேஜர் குஞ்சிதபாதம், கும்பகோணம் கிளையின் சீனியர் மேனேஜர் கணேசன், இன்ஸ்பெக்சன் பிரிவு சீனியர் மேனேஜர் மகாராஜன், மண்டல மேலாளர் சுயம்புலிங்க ராஜா மற்றும் திருச்செங்கோடு கிளை மேலாளர் ராமன் ஆகிய ஆறு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கோவை குற்றப்பிரிவு போல செல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என வங்கி அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர் மனுவின் பேரில் விசாரணை நடத்திய நீதிபதி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார் .இதை எதிர்த்து புகார்தாரர் கேசவ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .தொடர்ந்து வழக்கு விசாரிக்க தடை இல்லை என்றும் வங்கி அதிகாரிகள் மீது விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய மனு தாக்கல் செய்தனர். இதற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் புகார் கேசவ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் . அப்போது மோசடி செய்த வங்கி அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏற்கனவே திருச்செங்கோடு குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு இருப்பதாகவும் அதனுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வங்கி அதிகாரிகள் வழக்கை ரத்து செய்ய தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.