
கோவை,
கோவையில் 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, ஜமேசா முபீர் ஓட்டி வந்த கார், அதிகாலை 4:30 மணிக்கு வெடித்தது. போலிசார் நடத்திய விசாரணையில் இது சதி செயல் அரங்கேற்ற திட்டமிடப்பட்ட, கார் வெடிப்பு (கார் குண்டு வெடிப்பு) சம்பவம் என்பது விசாரணையில் தெரியவந்தன.
இந்த நிலையிலே, இந்த வழக்கு தேசிய முகமை அதிகாரிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் விசாரணையின் போது, தமிழ்நாடு காவல் துறையால் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் தேசிய முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணை அடிப்படையிலும் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதுவரை இந்த வழக்கில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்திவரும் என்ஐஏ அதிகாரிகள், அவ்வப்போது சோதனைகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.
அந்த வகையில், இன்று கோவை அல் அமீன் காலனி பகுதியைச் சார்ந்த ரகுமான் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். ரகுமான் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். ரகுமான் வீடு மட்டும் இன்றி, கோவை மாவட்டம் முழுவதும் 12 இடங்களில், அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.