
கோவை,
நாடாளுமன்ற தேர்தலில்
கோவையில் கமலஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நிலையில், அதற்கான தேர்தல் பணிகள் அனைத்து கட்சிகளாலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணி ஒருபுறம், காங்கிரஸ் கூட்டணி ஒருபுறம் கூட்டங்களை நடத்தி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மாநில அளவிலான கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்காக களப்பணியில் இறங்கி இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மையம் “மக்களோடு மையம்” என்ற தலைப்பில், நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு தரவேண்டிய வாக்குறுதிகள் குறித்து கருத்து கணிப்பில் இறங்கி இருக்கின்றனர். மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட, கோவை தெற்கு தொகுதியில் இந்த கருத்துக்கணிப்பு பணியை ஆரம்பித்திருக்கின்றனர். கட்சியின் மாநில துணைத்தலைவர் தங்கவேலு, கொள்கை பரப்பு மாநில செயலாளர் அர்ஜுன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கருத்து கணிப்பை ஆரம்பித்தனர்.
முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சொந்த தொகுதி என்றனர். அதன் அடிப்படையில், மக்களோடு மய்யம் என்ற இந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை, இங்கிருந்து ஆரம்பித்ததாக தெரிவித்தனர். தாமாக தேர்தல் வாக்குறுதிகளை கட்டமைக்காமல் பொதுமக்களின் தேவைகளை கருத்துக்கணிப்பின் முலமாக கட்சி தலைமை அறிய செய்து, அதிலிருந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்றனர். அதே சமயம் அதிக அளவிலான பொதுமக்களின் ஆதரவு கோவை தெற்கில் இருப்பதனால், கமல்ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் தங்கவேல்,ஆய்வு மற்றும் கொள்கை அணி மாநில செயலாளர் அர்ஜூனர்,மண்டல செயலாளர் ரங்கநாதன், மாநில விவசாய அணி செயலாளர் மயில்சாமி,மண்டல நற்பணி இயக்க செயலாளர் சித்திக்,மண்டல ஊடக பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால் ,மத்திய மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் மய்ய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.