சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கோவை
கோவையில் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளிடக்கி சி.எஸ்.ஐ ஆலயங்கள், சி.எஸ்.ஐ பள்ளிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்கும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை பிரிக்க கூடாது என்று வலியுறுத்தி கிறிஸ்டியன் வெல்பேர் மூவ்மெண்ட் அமைப்பின் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா பிரேம்குமார், பொருளாளர் கே .ஆர். ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவையை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்
கோவை, ஈரோட்டை சேர்ந்த சி.எஸ்.ஐ. அமைப்பினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள 70 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரையும் 9 மணிக்கு மேல் போலீசார் விடுதலை செய்தனர்.