கடன் தொல்லையால் நகை கொள்ளையடித்தோம்
கைதானஅண்ணன்-தம்பி வாக்குமூலம்

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55). விவசாயி. தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது சித்தப்பாவின் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து மணியம்மாள் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், சிறுமுகை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலையை சேர்ந்த வீரமணி (35) மற்றும் அவரது தம்பி ஆகாஷ் (19) ஆகியோர் என்பதும், மூதாட்டி மணியம்மாளின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

ேமலும் விசாரணையில் அவர்கள் தற்போது காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும், ஊரில் உள்ள கடன் பிரச்சினையால் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *