
கோவை,
பாட்னாவிலிருந்து எர்ணாகுளம் சென்ற விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிலான போதை ஆயிலை ரயில்வே அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ் – 10 பெட்டியில் 71ஆவது இருக்கையின் அடியே மர்ம கவர்கள் இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து 3 பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்த ரயில்வே காவலர்கள் அதனை சோதனை செய்த போது அதில் 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் என்ற போதைக்கு பயன்படுத்தும் எண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.2 கோடி. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை எண்ணெய்யை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.