கோவையில் மாணவிகளுக்கு
மாதம் 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்

உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 620 மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 199 கல்லூரிகளைச் சோ்ந்த 3,596 மாணவிகள் இணைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் முதல்கட்டமாக 620 மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1000 உதவித் தொகையை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை ஆணையா் மோ.ஷா்மிளா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலா் ப.தங்கமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *