
கோவை நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56) விவசாயியான இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (58). கூலித்தொழிலாளி. இவர்கள் 2 பேரும் பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்துள்ளனர். போலி மதுவா? இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரனும் உயிரிழந்தார். மது அருந்திய 2 பேரம் சிறிது நேரத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்ததும் நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேலுச்சாமி, மனோகரன் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாராயமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.