
கோவை கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.இதில் கலெக்டர் சமீரன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து 720 பயனாளிகளுக்கு ரூ.4.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
ஒரு கிராமத்துக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற வகையில் தான் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கு மக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜக்கார்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் குமார் என்பவர் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று விட்டு, இயற்கை வேளாண்மை முறையில் விவசாயம் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவரை போன்று ஆர்வமுள்ள இளைஞர்கள் கிராமத்தில் உருவாக வேண்டும். மேலும் இந்த பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவருடைய மகள் ஸ்ரீநிதி ஆகியோர் தங்களுடைய 58.5 சென்ட் நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைக்காக தானமாக வழங்கி உள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டை கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.