
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலாவது கருத்து கேட்பு கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் துறையினர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூறும்போது:-
பல லட்சம் பேர் இந்த விசைத்தறி தொழிலை செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக கூலி உயர்வு கேட்டு போராடிய நாங்கள் தற்போது தான் கூலி உயர்வினை பெற்றுள்ளோம். இந்த சமயத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது எங்களுக்கு வேதனையாக உள்ளது. மின்சாரம் கட்டணம் உயர்ந்தால் மீண்டும் செலவுகள் அதிகரிக்கும். ஏற்கனவே இங்கு வர வேண்டிய ஆர்டர்கள் அனைத்தும் குஜராத்துக்கு சென்று விட்டது. இதனால் மிக குறைந்த அளவிலான ஆர்டர்களே வருகின்றனர். தற்போது மின்சார கட்டணத்தையும் உயர்த்தி விட்டால், எங்களிடம் வேலை பார்ப்பவர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டு நாங்களே தொழில் செய்ய வேண்டும். இல்லையென்றால், தற்போதைக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறும்போது, கொரோனோவிற்கு பின் தற்போது தான், எங்களது தொழில் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கே நாங்கள் பெரும் சிரமத்தை சந்தித்தோம். தற்போது மின்கட்டணமும் உயர்த்தப்பட்டால் தொழில் பெருமளவில் பாதிப்படையும். தொழில் நகரான கோவையில் தொழில்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும். எனவே தற்போதைக்கு அரசு மின்சார கட்டணம் உயர்த்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர். மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, மோட்டார் பம்ப் உற்பத்திக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜாப்-ஆர்டர்கள் குறைந்துள்ளது. இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலும் பாதிக்கப்படும். எனவே அரசு மின்கட்டணம் உயர்த்துவது தற்போதைக்கு வேண்டாம் என்றனர்.