
கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற ஆர். கிருஷ்ணன்(64). இவர் கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனாலும் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்தார்.இதனால் இவருக்கு திமுக தனி மரியாதை கொடுத்து வந்தது. உள்ளாட்சித் தேர்தல் முடிவிற்கு பிறகு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து பையா கவுண்டர் நீக்கப்பட்டார். இதை எடுத்து அவர் கட்சிப் பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பையா கவுண்டர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொனுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இதனிடையே அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கோவில் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது தொகுதி மட்டுமல்லாது கோவையின் பல்வேறு பகுதி மக்களுக்கும் உதவிகளை செய்துவந்த பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.