
கோவை,
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதாக
பாஜக மாநில தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழிற் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார். மேலும் தமிழக அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி குறித்த அவதூறான வகையில் கருத்துக்களையும் அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில்
சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டதாக பாஜக மாநில தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்பி ஆ. ராசா குறித்து பேசியதாக கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.