கோவை,
கோவையில் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு படுகொலைகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்று கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடந்து செல்வது போன்று அவர்களுடன் ஒரு பெண் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக இருந்தது. இதனை தொடர்ந்து கோவையில் வசித்து வரும் விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கையில் சிகரெட் பிடித்துக் கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து கோவை மாநகர போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோ வெளியிட்ட பெண் விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது: பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்பொழுது வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்கள் கணக்கில் வைத்து விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதன் அடிப்படையில் தீவிர தேர்தல் வேட்டை நடத்தி வருகிறோம். மேலும் ஒரு குழு அமைத்து சமூக வலைத் தளத்தில் அந்த பெண்ணுடன் நட்பில் உள்ளவர்கள் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வெகு விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இன்ஸ்டாகிராமில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.