கோவை
கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் தார் ஊற்றி அழிக்கப்பட்டன.இது தொடர்பாக விஸ்வஜன முன்னேற்ற கழக தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மேம்பால துண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் படிக்கும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளது. எனவே அந்த தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த தூண்களில் வரலாற்று ஓவியங்கள் வரைய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு கண்ணகி, சிலப்பதிகார காட்சிகள் உள்ளிட்ட ஓவியங்களை வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சிலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு உள்ள பகுதிகளில் 4 தூண்களில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் மீது தாரை ஊற்றி அழித்தனர்.
இது சாலையில் செல்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இது பற்றிய தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே விஸ்வஜன முன்னேற்ற கழக நிறுவனர் வேல்முருகன், ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், காந்திபுரம் மேம்பால தூண்கள் பகுதியில் விஸ்வகர்மா சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. எனவே அவற்றை நாங்கள் மை ஊற்றி அழித்து உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதை அடுத்து காட்டூர் போலீசார் விஷ்வஜன முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர் பின்னர் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் வீடு ஆகியவற்றுக்கு போலீசார் நேரில் சென்று வேல்முருகன் குறித்த விசாரணை நடத்தினார் பின்னர் அதிகாலையில் காந்தி பார்க்கும் பகுதியில் வைத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர் . தொடர்ந்த வரை போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து வந்த விசாரணை நடத்தினர் பின்னர் அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.