
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, மலர் தூவியும், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளான இன்று அரசு சார்பில், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டா டப்படுகிறது.விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் பெற்று நிறைவேற்றி தந்த மாமனிதர்.
நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
அவரது குடும்பத்தினர் சார்பில், அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். அவர் வாழ்ந்த வீடு நூலகமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வரக்கூடிய ஆண்டு அவரது நூற்றாண்டாகும். அந்த நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.