
கோவை,
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பயணமானது 6 இருசக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டு வில் முடிவடைகிறது. இதற்காக 14 நாட்களில் 7000 கிமீ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் இருந்து காத்மண்டு வரை இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கின்றனர் எனவும் கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்களை , குற்றங்கள் நடக்கும் முன் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது என்றார்.
சைபர் குற்றம் நடந்த பின் பணத்தை மீட்பதில் சிக்கல் இருக்கின்றது என்று கூறிய அவர் இது போன்ற குற்றங்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ நிகழ்த்தப்படுவதாக கூறினார். கோவை மாநகர சைபர் கிரைம் விங் இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து வருவதாக தெரிவித்த அவர்
பண இழப்பை தடுத்து வருவதாகவும் கூறினார்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் பேர், புகழை பாதிக்கும் வகையில் நடப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த படுவதாகவும் தெரிவித்தார். ஒரு சில நாட்களாக பிரைன்டோ என்கிற “கே” செயலியில் பதிவு செய்து பயன்படுத்தி வரும் போது பணம் பறித்தல் நிகழ்வுகள் நடப்பதாக புகார் வந்துள்ளதாக கூறினார்.
புதிய மொபைல் ஆப் வந்து கொண்டே தான் இருப்பதாகவும்
புதிய மொபைல் ஆப்பினை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின் பயன்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.
சைபர் கிரைம் விங்கிற்கு 10 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஓவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சைபர் கிரைம் குறித்து இரு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும்
உதவி ஆணையர் தலைமையில் சைபர் யூனிட் துவங்கும் திட்டமும் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் மட்டுமே இருக்குமெனவும் கூறினார். உணர்ச்சி ரீதியான குற்றங்கள் அதிகமாகி வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக புகார் கொடுக்க வேண்டும் என்றார்.
கல்லூரிகளில் சைபர் கிளப் ஏற்படுத்த பட்டு வருவதாகவும் இதுவரை 81 கிளப் உருவாக்கப்பட்டு
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்ல கவனம் செலுத்துகின்றோம் எனவும் கூறினார்.
போலீஸ் ஸ்டேஷனில் வேலை வாங்கி தருவதாக கூறியும் நூதன மோசடி நடைபெறுவதாக தெரிவித்த அவர் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொழில் நிறுவனம், அரசு சார்ந்த நிறுவனம் என எதுவாக இருந்தாலும் நடைமுறைக்கு ஓவ்வாத விடயங்களை கூறினால் நம்ப கூடாது என்றார்.
பணம் பரிமாற்றம் தொடர்பான விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்த அவர் சிசிடிவி கேமராக்களை பொறுத்து வரை பெரும்பாலான இடங்களில் இருப்பதாகவும் இடைவெளி இருக்கும் பகுதிகளில் அவற்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல் துறை பாதுகாப்பில் இருப்பார்கள் எனவும் வாகனத்தை வேகமாக இயக்குவது, குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முக்கிய சாலைகளில்
500 மீட்டருக்கு ஒரு இடத்தில் பேரிகார்டு அமைத்து கண்காணிக்கப்படும் எனவும் கோவையில் இரவு நேரங்களில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் இயக்குவதை சில தினங்களாக 3 சிறப்பு படைகள் அமைத்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார். அவினாசி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது செயல்பட கூடாது என தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்தில் எல்எஸ்டி , மெத்தபெட்டமைன் போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.