கோவையில்  வீட்டில் பிடிபட்ட வெள்ளை நாகபாம்பு.

கோவை:

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபால்.  இவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அறையில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதை அவர் பார்த்தார். அருகில் சென்று பார்த்தபோது அது திடீரென சீறியது. அப்போது தான் அது பாம்பு என்பது அவருக்கு தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அங்கு வந்தார். அவர் அதனை லாவகமாக ஒரு பாட்டிலில் அடைத்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ராசுகுட்டி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் பாட்டிலில் இருந்த பாம்பை பத்திரமாக எடுத்து கொண்டு சென்றார். பின்னர் பாம்பை வனத்துறையினர் பரிசோதனை செய்து பாலமலை வனப்பகுதியில் விடுவித்தனர்.

பாம்பு நாகபாம்பு வகையை சேர்ந்தது. பாம்பு 4 அடி நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்தது சாதாரணமானது தான். நாகபாம்பு அல்பினோ என்னும் குறைபாட்டால் வெள்ளை நிறத்தில் காணப்படும் என்றார்.

இந்த நிலையில் பாம்பு வெள்ளை நிறத்தில் இருந்ததால் அதனை பார்க்க அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குவிந்தனர். அவர்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அதனை சிலர் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.