கோவை:
வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவையில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் என அனைவரும் தீபாவளியை கொண்டாட ஊருக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். இதனால் கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக கோவையில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிங்காநல்லூரில் இருந்தும், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.
இதுதவிர ஏராளமானோர் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்தவர்களும் ஊருக்கு புறப்பட்டனர். இதனால் கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் கோவையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இணைகமிஷனர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவத்தன்று ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு சரக்கு ஏற்றி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து சரக போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், கோவை சரகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி, அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் 1800 425 6151 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
%d bloggers like this: