கோவையில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி.! கோவை சிவானந்தகாலனி பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. பறை இசை முழங்க நடைபெற்ற இந்தப் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆண்கள் பெண்கள் என அனைத்து பெரியார் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். அதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பேரணியில் சமூக நீதியை காக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். சிவானந்த காலனி பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த கருஞ்சட்டை பேரணியானது காந்திபுரம் வரை நடைபெற்றது. தந்தை பெரியார் வாழ்க, சமூக நீதி காப்போம், சாதி மதம் அற்ற சமத்துவத்தை படைப்போம் என முழக்கங்கள் இட்டவாறு பெரியார் உணர்வாளர்கள் பேரணியை நடத்தினர். இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர், கு. ராமகிருஷ்ணன் கூறும் போது பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி இன்று நடத்தியுள்ளோம். பெரியார் விட்டுச் சென்ற சமூக நீதியை சமத்துவத்தை சமதர்ம திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சாதி மதம் அற்ற ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். கோவையை மதவெறி பூமியாக வைத்துக் கொண்டிருக்கும் சக்திகளை அகற்றி அமைதியான கோவையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பேரணியை நடத்தினோம் என்றார். கோவையில் நடைபெற்ற இந்த கருஞ்சட்டை பேரணியில்1000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *