தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை : மேயர் தகவல்

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த உக்கடம் ஒண்டிப்புதூரில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தை துரிதப் படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள் 134 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் மாநகர பகுதிகளில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. எனவே வார்டு, வீதி வாரியாக கால்வாய்கள் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பதில் அளித்து பேசுகையில் உரிய அனுமதியில்லாமல் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழிகளை தோண்டி மூடாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேம்பாட்டுக்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 மாநகராட்சி பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை அழிக்கும் எந்திரம் வழங்கப்பட உள்ளது.தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.