மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள்

கோவை ,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இன்று காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்றார். மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து தி.மு.க. கட்சி விழா நடைபெறும் ஆச்சிபட்டி திடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைய உள்ளனர். அதன்பிறகு முதல்-அமைச்சர் கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி, விழாவில் பேசுகிறார். இதனையொட்டி அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருப்பூர் செல்கிறார். நாளை காலை 10 மணிக்கு திருப்பூரில் அவர் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் செல்கிறார். அங்கு கள்ளிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்துவைக்கிறார். நாளை மறுநாள் (26-ந் தேதி) காலை 10.45 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து மீண்டும் கோவை வரும் மு.க.ஸ்டாலின் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *