கோவையில் டெல்விங் நிறுவனம் அறிமுகம்
கோவை,
மென்பொருள் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் உதவியுடன் இணையம் வழியாக மின் சாதனங்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் அளவீட்டு சாதனமான டெல்ஸ்மார்ட் ஐஓடி மீட்டரை இன்று கோவை, வர்த்தக சபை மையத்தில் நடைபெற்ற அறிஞர்கள் நாள் நிகழ்ச்சியில் டெல்விங் ரிசர்ச் அன்ட் டெவலப்மெண்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்நிகழ்ச்சியில் கொடிசியா முன்னாள் தலைவர் ஆர். ராமமூர்த்தி, டெல்விங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான டாக்டர் ஆர். சித்ரா, பிஎஸ்ஜி–ஸ்டெப் செயல் இயக்குனர் டாக்டர் கே. சுரேஷ் குமார், கொடிசியா தலைவர் வி. திருஞானம் மற்றும் என்.வி. குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் என். வெங்கடராமன் ஆகியோர் முன்னிலையில் டெல்ஸ்மார்ட் ஐஓடி மீட்டரை ஏவி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஏ.வி. வரதராஜன் மற்றும் இந்திய ஜவுளித் தொழில் மற்றும் ஜவுளித் துறை திறன் கவுன்சில் கூட்டமைப்பின் தலைவர் டி. ராஜ்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், டெல்விங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர். சித்ரா தங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மென்பொருள் மேம்பாடு மற்றும் ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ ஆகிய தயாரிப்புகளுக்கு எங்கள் நிறுவனம் இந்தியா ஸ்மார்ட் கிரிட் போரம் வழங்கும் “ஸ்மார்ட் ஸ்டார்ட்அப் 2022” விருதை பெற்றுள்ளது என்றும்,
மத்திய அரசின் மின்துறை அனுமதியின் பேரில் மத்தியப் பிரதேச அரசு மின்சாரப் பயன்பாட்டில் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் அம்மாநில மின்சாரத்துறையால் நடத்தப்பட்ட ‘பவர்தான் 2022’–ல் எங்களின் டெல்ஸ்மார்ட் ஐஓடி மீட்டர் பயன்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட் மீட்டரை, வீடு, கடைகள் மற்றும் அனைத்து தொழில்துறை நிறுவனங்களில் பயன்படுத்துவதன் மூலம், தற்போதைய மின் நுகர்வு குறைக்கப்படும், இதன் விளைவாக மின்சாரமும் சேமிக்கப்படும், அத்துடன் மின் கட்டணமும் வெகுவாக குறையும். மேலும், மின் சாதனங்கள் வினியோக மின்மாற்றிகளில் இந்த மீட்டரை பயன்படுத்துவதன் மூலம், நாட்டிற்கு லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வணிக இணை ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் டெல்விங் நிர்வாக இயக்குனர் ஆர். நாராயணசாமி – விஜயலட்சுமி மார்க்கெட்டிங் தலைமை செயலாளர் நடராஜன் ராஜன்பாபு, ஜவுளி மற்றும் ஆடைகளுக்கான ஏஐசி – நிப்டிஇஏ இன்குபேஷன் மையத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ். பெரியசாமி, சென்னை ட்ரைபிளேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் முத்தையா, பெங்களூர் ஸ்ரீ ராகவேந்திரா எலக்ட்ரிக் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர். சஞ்சீவ் குமார் மற்றும் ராவன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபு லிங்கம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.