வழிப்பறியில் ஈடுபட்ட வங்கி மேனேஜர்

கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கிரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். வெங்கிட்டாபுரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை வழிமறித்து பணத்தை கேட்டு மிரட்டினர். ஆனால், அவர் பணம் தரமறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார்த்திகேயனை தாக்கினர். இதில் காயம் அடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டார். இதைகேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 3 பேரில் ஒருவர் கார்த்திகேயனிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் டீ மாஸ்டரை தாக்கியது, ஒண்டிப்புதூர் சூர்யா நகரைச்சேர்ந்த மகேஷ்குமார், புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்த தினேஷ்குமார்(23), மற்றும் தப்பியோடிவர் நிசாத் என்பது தெரியவந்தது. இதில் மகேஷ்குமார் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கைதான மகேஷ்குமார் மற்றும் தினேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய நிசாத்தை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கி மேனேஜரே வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *