
கோவை ,
கட்டுமான நிறுவனம் நடத்தி வீடு கட்டித் தருவதாக, மோசடியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் ஜெகநாத்சிங்(41). இவரது மனைவி, கலைவாணி( 38). இவர்கள் கியூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இருவரும் பலரிடம் இடம் வாங்கி வீடு கட்டித் தருவதாக, பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்டனர்.
இவர்கள் இருவர் மீதும், கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில், நான்கு, பீளமேடு போலீஸ் ஸ்டேஷன், கோவை மாநகர குற்றப்பிரிவில் தலா ஒரு மோசடி வழக்குகள் என, ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருவரும் ராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெகநாத்சிங்கிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு, சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.