அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் ஒரு பிரச்சினையா
த.மா.கா. யுவராஜா பேட்டி

கோவை,
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சொத்து வரி, மின்கட்டணம், பால் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் அணி தெற்கு மாவட்ட தலைவர் கார்த்தி கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி. வாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:.
தி.மு.க. அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. அவர்கள் கூறிய வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு ஆயிரம் உதவித்தொகை, விவசாய கடன் கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை முன் வைத்து தான் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால் இந்த 18 மாதங்களில் அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பால் விலை, மின் கட்டணம் ,சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி மக்களிடம் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து நாங்கள் இதுவரை தமிழகத்தில் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளோம். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எத்தனை லட்சத்தில் வாட்ச் கட்டினால் என்ன, அவர் என்ன ஆட்சி பொறுப்பிலா இருக்கிறார். உயர்த்தப்பட்ட கட்டணங்களை மறைப்ப தற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் தி.மு.க மக்களை திசைத் திருப்பி வருகிறது. கோவையில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தி.மு.க. பொறுப்பேற்றதும் அந்தத் திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர். மேலும் புதிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.