கோவை தங்கம் வீட்டில் துக்கம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவை வந்தார். காலை 11.15 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து காரில் கோவை சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். வீட்டில் இருந்த கோவை தங்கத்தின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு கரூர் செல்லும் அவர் அங்கு ஓய்வெடுக்கிறார். நாளை காலை 10 மணிக்கு அரவக்குறிச்சி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிற்பகலில் திண்டுக்கல் செல்லும் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார். முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.