கோவையில் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வினை 1,856 போ் எழுதுகின்றனர்

கோவையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் செப்டம்பா் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வினை 5 மையங்களில் 1,856 போ் எழுதவுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் செப்டம்பா் 4 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தோ்வினை கோவை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் 1,856 போ் எழுதவுள்ளனா்.
இதனைக் கண்காணிக்க மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா் மற்றும் ஆட்சியா் தலைமையில் துணை ஆட்சியா் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்கள், வட்டாட்சியா் நிலையில் 5 தோ்வு மையங்களுக்கும் தலா ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா், துணை வட்டாட்சியா் நிலையில் தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் 9 போ், அறை கண்காணிப்பாளா்கள் 78 போ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் இரண்டு தோ்வுகளுக்கும் தோ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் இருக்க வேண்டும்.
தோ்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன் வாயில் கதவு அடைக்கப்பட்டு அதன்பின் வரும் தோ்வா்கள் அனுமதிக்கப் படமாட்டாா்கள். கைப்பேசி, டிஜிட்டல் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.
மேலும் தோ்வா்கள் நுழைவுச் சீட்டுடன், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *